இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரிய செலவுகள் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால், நீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் உருவாகவில்லை என குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் எந்தவித உயர்வும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இக்காலப்பகுதியில் மின்சாரக் கட்டணம் 18 சதவீதம் அதிகரித்திருந்தாலும், எரிபொருள் விலை உயர்வு நீர் சுத்திகரிப்பு செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கவில்லை என அமைச்சர் விளக்கினார்.
நீர் உற்பத்தி செலவில் மின்சாரத்தின் பங்கு சுமார் 12 சதவீதம் மட்டுமே என்பதால், அந்த செலவினத்தில் ஏற்பட்ட 18 சதவீத உயர்வு ஒரு அலகு நீருக்கு சுமார் ரூ.2.50 அளவிலான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், மொத்த செலவீனம் பெரிய அளவில் அதிகரிக்காததால், அடுத்த ஆறு மாதங்களுக்கும் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
