நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டு, காவலில் எடுத்துள்ளனர்.
நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டைகளுக்கு இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில், வீதியைக் கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியுடன் நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான கவிந்து ஹஷான் சோமதிலக ஆகிய இரு இளைஞர்களும் உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடிய சிலர் கொள்கலன் லொறிக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் கட்டான பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், விபத்து இடம்பெற்ற விதத்தை காட்டும் பரபரப்பான CCTV காட்சிகளும் வெளியாகியுள்ளன.
CCTV காட்சிகள் உள்ளிட்ட கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்கு சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
