Home இலங்கை ஆக்ரோஷமடைந்து தாக்கிய யானை – இரு பாகன்கள் உயிரிழப்பு

ஆக்ரோஷமடைந்து தாக்கிய யானை – இரு பாகன்கள் உயிரிழப்பு

0
image

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவில் கலந்து கொள்ள இரண்டு யானைகள் விகாரை அருகே  கட்டி வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை, யானை பாகனின் உதவியாளர் யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அதனை இறக்குவானை ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது திடீரென ஆத்திரமடைந்த யானை, உதவியாளரைத் தாக்கி மிதித்துக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டுத் துரிதமாக வந்த யானை பாகனையும் அந்த யானை தாக்கியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, அந்த யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல் பகுதிக்குத் தப்பிச் சென்றுள்ளது. பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

யானையை மயக்க மருந்து வழங்கி கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெரஹராவில் கலந்துகொண்ட பக்தர்கள் மத்தியில் இந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/elephant-rampages-during-procession-attacks-in-anger–two-devotees-dead-1782106389

NO COMMENTS

Exit mobile version