பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவரின் சொகுசு காருக்கு 8 வயது சிறுவன் தீ வைத்ததாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளி தொடர்பில், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகல் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சுமார் 1.4 கோடி ரூபா பெறுமதியான கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த தீ விபத்துக்கு 8 வயது மாணவன் காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் என்றும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த வாகனத்திற்கு அருகில் நடந்து சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அந்தச் சிறுவனே வாகனத்திற்கு தீ வைத்தார் என்பதை நிரூபிக்கும் நேரடி சாட்சியமோ, தடயவியல் ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை விஞ்ஞான ரீதியில் கண்டறிவதற்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் (Government Analyst) விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
