Home இலங்கை ஆபத்தான கடல் கொந்தளிப்பு:மீனவர்களுக்கு மீன்வளத் துறை முக்கிய வேண்டுகோள்!

ஆபத்தான கடல் கொந்தளிப்பு:மீனவர்களுக்கு மீன்வளத் துறை முக்கிய வேண்டுகோள்!

0
image

புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் ஆபத்தான முறையில் பலத்த காற்றும், கடும் கொந்தளிப்பும் நிலவி வருவதால், அங்கு மீன்பி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை மறுஅறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த கூறுகையில்:

“நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் மோசமான வானிலை ஓரளவு தணிந்துள்ளபோதிலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் இன்னமும் சீரற்ற வானிலையே காணப்படுகிறது. இதனால் புத்தளம், சிலாபம்,  நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோரப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.”

வளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், இந்தத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்து கடலுக்குச் சென்ற மன்னார், கற்பிட்டி, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகப் பணிப்பாளர் நாயகம் கவலை தெரிவித்தார்.

மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடலில் தொழில் புரியும் எந்தவொரு சூழலிலும் உயிர்காப்புச் சட்டைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/dangerous-rough-seas-important-appeal-by-the-fisheries-department-to-fishermen-1785774247

NO COMMENTS

Exit mobile version