மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று இரவு வெகு விமரிசையாக ஆரம்பமானது.
இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பாரம்பரிய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது.
கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜை முறைகளுக்கு ஒப்பான வகையில், மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவமும் கப்புறாளைகளினால் வாய் கட்டப்பட்ட நிலையில் பாரம்பரிய சடங்குகளுடன் முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு இலங்கையில் பழமையும், பிரசித்தியும் பெற்ற முருகன் ஆலயங்கள் “திருப்படைக் கோயில்கள்” என அழைக்கப்பட்ட நிலையில், பண்டைய அரசர்களின் ஆதரவு, மானியங்கள், சீர்வரிசைகள் மற்றும் தனித்துவமான நிர்வாக அமைப்பைப் பெற்ற ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்குகிறது. இதன் காரணமாக இது “தேசத்துக்கோயில்” எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ரங்கநாதன், ஆலயத்தின் தேசத்துக்குருவான சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் மற்றும் ஆலய வண்ணக்குமார்கள் தலைமையில் திருவிழா அறிவிப்புகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆலயத்தின் உட்பகுதியில் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து வள்ளியம்மன் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு முன்பாகவும் பாரம்பரிய கொடிகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாக் காலத்தில், தினமும் வேல் தாங்கிய பேழை ஆலயத்தின் உள்வீதியிலும் வெளிவீதியிலும் எடுத்துவரப்பட்டு வீதியுலா இடம்பெறவுள்ளது.
திருவிழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
நேற்றைய கொடியேற்ற நிகழ்வைக் காண கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
