பதுளை நகரில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில், நான்கு மாணவிகளும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
குறித்தப் பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்று, நேற்று விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இரசாயனப் பொருட்கள் தொடர்பான பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதன்போது, இரசாயனப் பொருட்களை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பீக்கர் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால் அங்கிருந்த நான்கு மாணவிகளும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியை ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகப பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
