எத்தனை ஆட்சி மாறி மாறி வந்தாலும் தமிழர்களின் நிலையை மாற்ற முடியாது. இப்படியான அரசு தேவையா? என்று கேப்பாப்பிலவு மக்கள் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 25ஆவது நாளை எட்டியுள்ளது.
கேப்பாப்பிலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது நில உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இணைந்து கவனயீர்ப்பில் பங்கேற்றார்.
குறித்த காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 25ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
