இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் (8) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றைய குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தினர், மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே நிலவும் தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த கைக்குண்டுத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/ratmalana-hand-grenade-attack-four-arrested-1786248021
