Home இலங்கை இலங்கையின் முதியோரில் 10% பேருக்கு சிறுநீரக நோய் நிபுணர் எச்சரிக்கை

இலங்கையின் முதியோரில் 10% பேருக்கு சிறுநீரக நோய் நிபுணர் எச்சரிக்கை

0
image

இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தவிர, இந்நாட்டில் இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பெருமளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டிலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் கூறினார்.

இது சதவீத அடிப்படையில் 25% ஆகும் எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறுவதால் மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பதை விளக்கியுள்ளார்.

மேலும், இதற்கு மேலதிகமாக உயர் குருதி அழுத்தம் , இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுதல் போன்ற நிலமைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தற்போது பதிவாகியுள்ள 10% சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25% வரை உயரக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அது 30% முதல் 40% வரை கூட அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

சிறுநீரக நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இளைஞர்களும் இனங்காணப்பட்டதாகக் கூறிய வைத்தியர், அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின்படி, உடற்கட்டமைப்பு (Bodybuilding) மற்றும் சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் பயன்பாடே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/10-of-sri-lankas-elderly-suffer-from-kidney-disease-expert-warns-1784387736

NO COMMENTS

Exit mobile version