கொழும்பு, டாம் வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘உண்டியல்’ (Undiyal) முறையின் ஊடாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், CID-யின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 10,467,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பணத்திற்கான சட்டபூர்வமான ஆதாரத்தை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரிடம் 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் ஒன்றும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
