Home இலங்கை ஊழல்வாதிகள் தப்ப முடியாது! அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி என்கிறார் பிரதி அமைச்சர்

ஊழல்வாதிகள் தப்ப முடியாது! அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி என்கிறார் பிரதி அமைச்சர்

0
image

“நாட்டில் ஊழல் மற்றும் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடவே முடியாது. தவறிழைத்தவர்கள் யார் என்ற பேதமின்றி அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” – என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தராசு பார்க்காமல் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் முதன்மைப் பொறுப்பாகும். இதனைச் சிலர் ‘அரசியல் பழிவாங்கல்’ எனப் பூசி மெழுகப் பார்க்கின்றனர். 

ஆனால், இதுவொருபோதும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. மாறாக, ஊழலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எமக்கு வழங்கியுள்ள வரலாற்று ஆணைக்கு மதிப்பளித்து, அதனை நடைமுறைப்படுத்தும் தூய்மையான செயற்பாடாகும். எனவே, யார் எந்தவொரு உயர் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.

ஏற்கனவே ஊழல் புரிந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராகப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் எதிரான விசாரணைகள் தற்போதைய சூழலில் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலர் எள்ளிநகையாடும் தொனியில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரும் கைது செய்யப்பட்டால் நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்றுமில்லாமல் போய்விடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதற்காகச் சட்டத்தை அமுல்படுத்தும் தார்மீகப் பொறுப்பை அரசாங்கத்தினால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களைச் சூறையாடியதற்குச் சட்டத்தின் முன் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.   என்றார். 

Source: https://samugammedia.com/corrupt-people-cant-escape-the-deputy-chief-minister-says-everyone-is-sure-to-go-to-jail-1783318251

NO COMMENTS

Exit mobile version