Home இலங்கை எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை அதிகரிக்கும் அபாயம் – வைத்திய நிபுணர்...

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை அதிகரிக்கும் அபாயம் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை

0
image

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாகவும், இதனை எதிர்கொள்ள உடனடியாக தேசிய சுகாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 

சர்வதேச காலநிலை அமைப்புகளின் எச்சரிக்கைப்படி எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாட்டின் சில பிரதேசங்களில் தீவிர வறட்சியும், ஏனைய பகுதிகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற அசாதாரண காலநிலை நிலவக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, தீவிர வறட்சியினால் நாட்டின் விவசாயத் துறை பாதிக்கப்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும் போது, கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறிய அவர், இதன் விளைவாக உணவுகளின் விலைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரிய மந்தபோஷணை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இக்காலகட்டத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாகக் குடும்ப வன்முறைகள், விபத்துக்கள் பெருகுவதுடன், இதய நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற தொற்றா நோய்களின் தாக்கமும் அதிகரிக்கக்கூடும் எனக் எச்சரித்தார்.

அதேபோன்று, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் குடிநீர் சார்ந்த தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

எனவே, பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு நிவாரணம் வழங்குவதைத் விடுத்து, முன்கூட்டியே இதனை எதிர்கொள்ளக்கூடிய ‘அவசரகால தயார்நிலை திட்டம்’ (Emergency Preparedness Plan) ஒன்றை சுகாதார அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஒருங்கிணைத்து, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளித்து, சுகாதார அமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Source: https://samugammedia.com/food-shortage-and-malnutrition-risk-in-sri-lanka-due-to-el-nio-impact–medical-expert-warning-1787999049

NO COMMENTS

Exit mobile version