Home இலங்கை கசிப்பு நிலைய முற்றுகைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய கும்பல்! மட்டக்களப்பில் பதற்றம்

கசிப்பு நிலைய முற்றுகைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய கும்பல்! மட்டக்களப்பில் பதற்றம்

0
image

மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர்.

தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/gang-attacks-police-who-went-to-siege-the-tear-gas-station-tension-in-batticaloa-1786078279

NO COMMENTS

Exit mobile version