Home இலங்கை கடற்பரப்பில் பலத்த காற்று; உயரும் கடல் அலைகள்! நாளை வரை ஆபத்து

கடற்பரப்பில் பலத்த காற்று; உயரும் கடல் அலைகள்! நாளை வரை ஆபத்து

0
image

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (04) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (05) முற்பகல் 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கடல் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை உயர்வதற்குக் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் கணித்துள்ளது.

குறித்த கடற்பரப்புகள் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படலாம் என்பதால், கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Source: https://samugammedia.com/strong-winds-over-the-sea-rising-sea-waves-danger-until-tomorrow-1780564836

NO COMMENTS

Exit mobile version