அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியைச் சேர்ந்த இரண்டு வர்த்தக நிலையங்களுக்குத் தலா 1.5 இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கிலோவொன்று 260 ரூபா எனக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள உள்நாட்டு கீரி சம்பா அரிசியை, 5 கிலோ பொதியொன்றில் கிலோவை 350 ரூபா வீதம் அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக முதல் வர்த்தகருக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
வெல்லவாய, யாலபோவ பகுதியில் கிலோவொன்று 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா (GR 11) அரிசியை கிலோ 260 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய வர்த்தகருக்கும் 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இரு வர்த்தகர்களும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதவானால் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
