கந்தளாய் குளத்தை அண்மித்த காட்டுப்பகுதிக்குள் நீண்டகாலமாக இரகசியமாக இயங்கி வந்த பாரிய அளவிலான சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் முற்றுகையிட்டு கண்டுபிடித்துள்ளனர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜயவர்த்தனவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அவரது நேரடி வழிகாட்டலின் கீழ் கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சோதனை நடவடிக்கையின் போது, காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பெரிய பரல்களும், ஒரு சிறிய பரலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் கள்ளச்சாராய உற்பத்திக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 8 இலட்சத்து 90 ஆயிரம் மில்லி லீற்றர் (890,000 ml) கோடாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அங்கேயே அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பொலிஸாரின் வருகையை உணர்ந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்தும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://samugammedia.com/raid-on-illegal-moonshine-production-facility-in-kandhalai-1780649162
