Home இலங்கை கந்தளாய் நகரில் விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கை!

கந்தளாய் நகரில் விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கை!

0
image

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கந்தளாய் நகரின் முக்கிய பொது இடங்களில் இன்று (17) விசேட டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கந்தளாய் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்தின் சுற்றாடல் மற்றும் டெங்கு ஒழிப்புப் பிரிவு, மற்றும் கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகம் ஆகியன இணைந்து இந்த கூட்டுப் பரிசோதனை நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நடவடிக்கையின் போது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கந்தளாய் மத்திய பேருந்து நிலையம், பொதுச் சந்தை வளாகம் மற்றும் நகரின் பிரதான வடிகான்கள் உள்ளிட்ட பல பொது இடங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.

கந்தளாய் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், கந்தளாய் பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் (CSD) மற்றும் இராணுவத்தினரும் இணைந்து டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்ததுடன், பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வழங்கினர்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச திணைக்களங்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை, கந்தளாய் நகர மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சுற்றுச்சூழல் சுத்தத்திற்கும் பொதுச் சுகாதார மேம்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

Source: https://samugammedia.com/special-dengue-testing-operation-in-kandalai-city-1781674977

NO COMMENTS

Exit mobile version