மத்திய மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, நல்லதண்ணி சிவனடி பாதமலைக்கு செல்லும் பிரதான வீதியின் எஹெல கனுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர, தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் எஹெல கனுவ பகுதிக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவின் ஒரு பகுதி வீதியில் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீதியில் குவிந்துள்ள மண்ணை அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலைமை சீராகும் வரை அவ்வழியாக பயணிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
