காக்கைதீவு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் திண்மக்கழிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் இன்று (15) யாழ். மாநகர சபைக்கு முன்னால் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை தமக்கும் மக்கள் கையளித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
“காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை நீண்டகாலமாக தொடரும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகர சபை நிர்வாகம் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடி விரைவான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தனது அனுபவத்தின் ஊடாக இந்த விடயத்தை வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுக்கொள்வதே சரியான அணுகுமுறை எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
