Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்கு 400 பேரை அழைத்துவர ஏற்பாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்கு 400 பேரை அழைத்துவர ஏற்பாடு

0
image

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (25) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து நிகழ்வில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் நீதி அமைச்சர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/arrangements-made-to-bring-400-people-to-jaffna-for-the-missing-persons-day-event-1787632327

NO COMMENTS

Exit mobile version