குருக்கள்மடம் பகுதியில் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மேலதிக அகழ்வாய்வுப் பணிகள் ஐப்பசி மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மண் படிவ மாதிரிகளை பரிசோதிக்கும் நோக்கில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
எனினும், அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ள தடயவியல் நிபுணர்களின் கோரிக்கைக்கு அமைவாக, பணிகளை எதிர்வரும் ஐப்பசி 6ஆம் திகதி முதல் முன்னெடுக்க நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த பங்குனி 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வில் எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில், அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில், மேலும் சில இடங்களைச் சுட்டிக்காட்டி, தமது சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதிகள் ஸ்கேன் செய்யப்பட்டதுடன், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக அகழ்வாய்வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், தடயவியல் நிபுணர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு அகழ்வாய்வுப் பணிகள் ஐப்பசி 6ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/kurukkalmadam-excavation-postponed-to-the-6th-of-aippasi-1789524907
