செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இன்று (20) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
குவைத் நகரிலிருந்து ஜசீரா ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான J9-551 விமானம் மூலம் அதிகாலை 3.10 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர்கள் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து தப்பிச் சென்று, வேறு இடங்களில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த நிலையில் அவர்கள் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், சட்ட நடவடிக்கைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தாயகம் திரும்பிய 20 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கியுள்ளது.
Source: https://samugammedia.com/20-sri-lankans-were-deported-from-kuwait-1789902479
