Home இலங்கை கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள்! ஆத்திரமடைந்த மக்கள் லொறிக்கு தீ வைப்பு

கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள்! ஆத்திரமடைந்த மக்கள் லொறிக்கு தீ வைப்பு

0
image

நீர்கொழும்பு – கட்டானா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம்அருகில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், அலுமினியம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கட்டானப் பொலிஸாரும் நீர்கொழும்பு மாநகரசபை தீயணைப்புப் பிரிவினரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையைச் சீர்செய்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்டப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியைச் சேர்ந்த ஹிப்பலகெதர உதித திலங்க நிர்மல என்பவரை கட்டானப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டானப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-youths-died-in-the-severe-accident-angry-people-set-fire-to-the-lorry-1785402516

NO COMMENTS

Exit mobile version