சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துப் பதிவிட்டதாகக் கூறி அனோஜன் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், தண்டனையைக் குறைப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நேற்று அவருக்கு மரண தண்டனை விதித்துத் உத்தரவிட்டுள்ளது.
அனோஜனின் விடுதலைக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனச் சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்குமாறும் இலங்கை மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கு உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், அனோஜனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து செய்வது அல்லது குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அனோஜனுக்கு தேவையான சட்டரீதியான உதவிகளை வழங்குவதுடன், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து அவரது மரண தண்டனையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபிய அதிகாரிகளுடன் இதுதொடர்பில் கலந்துரையாடவுள்ள வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
