Home இலங்கை சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

0
image

அரச புலனாய்வுச் சேவையின்  முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த 08ஆம் திகதி எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான சுரேஷ் சலே, அண்மைக்காலமாக சில தரப்பினரால் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவருக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தேசிய பாதுகாப்பிற்குப் பங்காற்றிய ஒரு உயர் அதிகாரிக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக உடனடியாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, சுரேஷ் சலேயின் சுகாதார நிலைமை தொடர்பாக நீதிமன்றம் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

ஐந்து பேர் கொண்ட விசேட மனநல மருத்துவக் குழுவொன்றை நியமித்து, அவரது உடல் மற்றும் மனநிலை குறித்து பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

சட்ட மருத்துவ அதிகாரியின்  முந்தைய தீர்மானத்திற்கு மாறாக, இந்த விசேட நிபுணர்கள் குழு நடுநிலையான மற்றும் நியாயமான அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இந்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை, அவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்படுவதாக அவர் அறிவித்தார்.

அதேவேளை, நீதிமன்றத்தின் அடுத்தகட்ட தீர்மானங்களை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்தீர்ப்புகள் தங்களுக்குத் திருப்தியளிக்காவிட்டால் மீண்டும் தமது போராட்டத்தை இன்னும் வலுவாக ஆரம்பிக்கத் தயங்கப்போவதில்லை எனவும் எச்சரித்தார். 

இப்போராட்டத்தின் ஆரம்பத்திலேயே, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே மீண்டும் தேசிய மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதே தங்களின் முதல் முக்கிய வெற்றியாகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு மற்றும் மருத்துவமனை மாற்றம் ஆகிய இரு முக்கிய நகர்வுகளையும் கருத்திற்கொண்டே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவெடுத்ததாகக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, இப்போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த விவகாரம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்திலும் மேலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/the-noisy-protest-in-support-of-suresh-salev-has-been-temporarily-abandoned-1781095837

NO COMMENTS

Exit mobile version