Home இலங்கை சுற்றுச்சூழல் விதிகளை மீறிய 41 தொழிற்சாலைகள் மூடல் – இனி கடும் நடவடிக்கை

சுற்றுச்சூழல் விதிகளை மீறிய 41 தொழிற்சாலைகள் மூடல் – இனி கடும் நடவடிக்கை

0
image

 

சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்காமல் தொடர்ந்து இயங்கி வந்த 41 தொழிற்சாலைகளை 2025 ஆம் ஆண்டில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டுவான பகுதியில் அண்மையில் தீ விபத்தால் சேதமடைந்த தொழிற்சாலை தொடர்பில் விளக்கமளித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ச இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்றார்.

சுற்றுச்சூழல் அளவுகோல்களை முறையாகப் பூர்த்தி செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தொழிற்சாலை நிர்வாகத்துக்கு பலமுறை எழுத்து மூலமும் வாய்மொழியிலும் அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய 19 தொழிற்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், மேலும் 5 தொழிற்சாலைகளுக்கு சட்டரீதியான கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு உரிம நிபந்தனைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், முதலில் குறைபாடுகளைச் சரிசெய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்தார்.

அதன்பின்னரும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாத பட்சத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உத்தியோகபூர்வ சட்டக் கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அவற்றையும் மீறி உரிமமின்றி தொழிற்சாலைகள் இயங்கினால், சம்பந்தப்பட்ட பிராந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சட்ட அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/41-factories-that-violated-environmental-rules-have-been-shut-down—strict-action-from-now-on-1784866681

NO COMMENTS

Exit mobile version