செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (13) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது இதுவரை 583 மனித என்புக்கூடுகள் மற்றும் பல்வேறு சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலைக்கு செம்மணி மனித புதைகுழி முக்கிய சான்றாகக் காணப்படுவதாகவும், எனவே சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.
பேரணி கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்ததையடுத்து அங்கு பொதுமக்கள் கூட்டமும் நடைபெற்றது.
