Home இலங்கை டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்.. நாடு முழுவதும் பேருந்துகள் மீது அதிரடி வேட்டை

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்.. நாடு முழுவதும் பேருந்துகள் மீது அதிரடி வேட்டை

0
image

இலங்கையில் டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிய, நாடு முழுவதும் பொலிஸார் திடீர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேலும் சந்தேகத்திற்குரிய பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

டீசலின் விலையை விட மண்ணெண்ணெய் மலிவாக இருப்பதால், கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில் சில பேருந்து உரிமையாளர்களும் சாரதிகளும் டீசலுடன் மண்ணெண்ணெயை கலந்து பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயல் மூலம் வாகனங்களின் இயந்திரங்கள் கடுமையாக சேதமடைவதுடன், சுற்றுச்சூழலுக்கும் அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், வழக்கத்தை விட அதிகளவில் கேன்கள் அல்லது கொள்கலன்களில் மண்ணெண்ணெய் வாங்கும் நபர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதோ அல்லது அதற்கு துணைபோகுவதோ சட்டவிரோதமானது என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மையில் கல்முனை தலைமையக பொலிஸார் நடத்திய திடீர் சோதனையிலும், மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட மூன்று தனியார் பயணிகள் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

கொரோனா காலப்பகுதியிலிருந்தே, குறிப்பாக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட பின்னர், கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மண்ணெண்ணெயை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும், திடீர் சோதனைகளின் போது 100 லீற்றருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் சில தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சிக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Source: https://samugammedia.com/kerosene-instead-of-diesel-a-crackdown-on-buses-across-the-country-1785556497

NO COMMENTS

Exit mobile version