நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அதனைச் சமாளிப்பது வைத்தியசாலை கட்டமைப்புக்கு கடினமாகிவிடும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தினார்.
வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதாரத் துறைக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகால திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றிலும் அழிப்பதே என அவர் தெரிவித்தார்.
“நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்க முடியும். இதைவிட அதிகமான நோயாளர்கள் பதிவாகத் தொடங்கினால், எமது வைத்தியசாலை கட்டமைப்பால் அந்த நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகும்,” என அமைச்சர் எச்சரித்தார்.
மேலும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தால், நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும், தற்போதைய சூழலில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
