Home இலங்கை தனியார் பேருந்து சேவையில் கடும் வீழ்ச்சி: ஆயிரக்கணக்கான பேருந்துகள் மண்ணெண்ணெயில் இயங்குவதாக குற்றச்சாட்டு

தனியார் பேருந்து சேவையில் கடும் வீழ்ச்சி: ஆயிரக்கணக்கான பேருந்துகள் மண்ணெண்ணெயில் இயங்குவதாக குற்றச்சாட்டு

0
image

இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போது நாட்டின் பல பகுதிகளில் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் பேருந்துகள் இயங்குவது போல தோன்றினாலும், பல கிராமப்புறங்களில் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகள் கூட பயணிகள் அதிகம் காணப்படும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்று வந்த பேருந்துப் பயணங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

மேலும், நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 2,000 முதல் 4,000 வரையிலான பேருந்துகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகவும், குறிப்பாக அநுராதபுரம் மற்றும் அம்பாறை பகுதிகளில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மண்ணெண்ணெயில் இயங்குவதாகவும் தெரிவித்தார்.

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பேருந்துகளை இயக்குவது சட்டவிரோதமானதுடன், அதனால் வெளியேறும் நச்சுப் புகை சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த நிலைமைக்கு பேருந்து உரிமையாளர்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாததே சிலர் சட்டவிரோத மாற்று வழிகளை நாடுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவித்தார்.

 

Source: https://samugammedia.com/sharp-decline-in-private-bus-service-thousands-of-buses-accused-of-running-on-kerosene-1781673767

NO COMMENTS

Exit mobile version