மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராடி வரும் கால்நடை வளர்ப்புப் பண்ணையாளர்கள், இன்று வெள்ளிக்கிழமை (14.08.2026) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பாரிய அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Mannar Social and Economic Development Organization (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணிகளை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் – வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் மைலத்தமடு – மாதவனை பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, பண்ணையாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், “பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதால் தீர்வு வழங்குவதில் தாமதமா?”, “பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையைப் பதிவு செய்வதில் ஏன் தாமதம்?”, “பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் காணிகளை ஒப்படைக்க காலம் போதாதா?” உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பல வருடங்களாக தொடரும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கி, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில மீட்புப் போராட்டம் இன்று (14) 17ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெயர்ந்த தாங்கள், பல தசாப்தங்களாக சொந்த நிலங்களை இழந்து இன்னமும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமது பூர்வீக நிலங்கள் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும், அவை தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, காங்கேசன்துறை – பொன்னாலை வீதியில் அமைந்துள்ள பங்களா இராணுவ முகாம் அருகில் காணி உரிமையாளர்கள் ஒன்றுகூடி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது நீண்டகால பிரச்சினைக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீர்வு வழங்கி, பூர்வீகக் காணிகளை விடுவித்து சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் என்பதே தங்களது தொடர்ச்சியான கோரிக்கையாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
