Home இலங்கை தமிழர் பகுதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழர் பகுதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

0
image

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. 

திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிர்நீத்தோருக்கு தமது அஞ்சலியை செலுத்தினர். 

இதேவேளை 43 ஆம் ஆண்டு  தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம்  தமிழீழ விடுதலை இயக்கம்  ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள  கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது  குட்டிமணி, தங்கத்துரை  உள்ளடங்களாக  53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான  நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை ஆகிய  இருவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் படுகொலை செய்யப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Source: https://samugammedia.com/velikadai-prison-massacre-memorial-event-in-tamil-areas-1785117506

NO COMMENTS

Exit mobile version