திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து, குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
காயமடைந்த மாணவர்களில் மூவரின் உடல்நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு திடீரென கலைந்ததால், அங்கு இருந்த மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
