Home இலங்கை தூணில் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி – பெண் பலி! சிலர் காயம்

தூணில் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி – பெண் பலி! சிலர் காயம்

0
image

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 01 பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (27) திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கான்கிரீட் தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும், முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Source: https://samugammedia.com/a-three-wheeler-crashed-into-a-pole—woman-dead-some-injured-1785212747

NO COMMENTS

Exit mobile version