Home இலங்கை நாமல் மீது சேறுபூசும் சதி! – சி.ஐ.டியில் பாய்ந்த மொட்டுவின் முறைப்பாடு

நாமல் மீது சேறுபூசும் சதி! – சி.ஐ.டியில் பாய்ந்த மொட்டுவின் முறைப்பாடு

0
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் கூறியதாவது:-

“மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி, அரசுக்குச் சார்பான தரப்புகளும், பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட தரப்பினரே, இன்று ராஜபக்ஷக்களுக்குச் சேறுபூச முயற்சிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கியுள்ளனர். இது குறித்து அரசு பதில் கூற வேண்டும்.

முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.” – என்று பசன் கஸ்தூரி மேலும் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/a-plot-targeting-namal—mottus-complaint-after-jumping-into-the-cid-1784004241

NO COMMENTS

Exit mobile version