ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடை பெற்றது.
தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச் சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புனர்வாழ்வு) எஸ்.கே. பல்லெதென்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயற்பாடுகள் மற்றும் புலனாய்வு) ஏ.சி. கஜநாயக்க உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
