Home இலங்கை புதிய சீனியுடன் கலக்கப்பட்ட காலாவதியான சீனி; பாரிய களஞ்சியசாலைக்கு சீல்!

புதிய சீனியுடன் கலக்கப்பட்ட காலாவதியான சீனி; பாரிய களஞ்சியசாலைக்கு சீல்!

0
image

காலாவதியான சீனியை புதிய சீனியுடன் கலந்து மறுபொதியிட்டு குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான பேலியகொட களஞ்சியசாலை ஒன்று முற்றுகையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மற்றும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று (06) மேற்கொண்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையின்போது, கம்பஹா மாவட்டம், களனி – பேலியகொட பகுதியில் அமைந்துள்ள குறித்த பாரிய களஞ்சிய வளாகம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு தற்போது காலாவதியான சீனி இருப்புகள், புதிய சீனியுடன் கலந்து மீண்டும் புதிய பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சீனி, சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது, குறித்த களஞ்சியசாலையில் 50 கிலோகிராம் எடையுடைய சுமார் 85,000 சீனி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த அளவு 4.2 மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், களஞ்சிய வளாகத்திற்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/old-sugar-mixed-with-new-sugar-a-seal-for-the-large-warehouse-1783409527

NO COMMENTS

Exit mobile version