Home இலங்கை புற்றரைக்கு தீ வைத்தபோது கையும் மெய்யுமாக பிடிபட்ட நபர்! அல்லைப்பிட்டியில் பரபரப்பு

புற்றரைக்கு தீ வைத்தபோது கையும் மெய்யுமாக பிடிபட்ட நபர்! அல்லைப்பிட்டியில் பரபரப்பு

0
image

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் புற்றரைக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள், கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன், தீ மற்றும் புகை பரவல் காரணமாக பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காண முடியாத நிலையில், வேலணை பிரதேச சபை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஒருவர் புற்றரைக்கு தீவைத்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/the-person-who-got-caught-red-handed-while-setting-fire-to-the-plantation-stir-in-allaipiddy-1788156612

NO COMMENTS

Exit mobile version