மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் தொடர்ச்சியாக ஆபாச வார்த்தைகளால் பேசி வந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய தந்தையொருவர், பாலியல் கொடுமை தொடர்பான சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் நேற்று (01) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தை தொடர்ந்து ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக அவர் பொலிஸ் மா அதிபருக்கு இணையவழி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலிருந்து சம்பந்தப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி, மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த 60 வயதுடைய நபர் நேற்று இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையுடன் தொடர்ச்சியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவரது ஆபாச பேச்சால் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் யுவதி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசி ஆரம்பக்கட்டமாக பரிசோதிக்கப்பட்ட போது, அதில் அதிகளவில் ஆபாச புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தப் பிரதேச பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
