மன்னார் மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று (09) பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
மணல்காடு பங்குத்தந்தையின் ஆசீர்வாதத்துடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் இன்று இரவு மணல்காடு சந்தி, மருதங்கேணி, புதுக்காடு ஊடாக இயக்கச்சி தேவாலயத்தை சென்றடையவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நாளை காலை அங்கிருந்து மீண்டும் பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மணல்காடு கிராமத்திலிருந்து மடு அன்னை ஆலயத்தை நோக்கிப் பயணிக்கும் யாத்திரிகர்களுடன், பயணப் பாதையில் உள்ள கிறிஸ்தவ மக்களும் இணைந்து மடு அன்னை ஆலயம் வரை பாதயாத்திரையில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
