Home இலங்கை மத்திய மலைநாட்டில் கனமழை தீவிரம்: நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு! சாரதிகளுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் கனமழை தீவிரம்: நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு! சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
image

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நுவரெலியா, நானுஓயா, டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலை, தலவாக்கலை, மெராயா, கொட்டகலை, ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ, நோர்வூட், புளியாவத்தை, மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை, வட்டவளை, கினிகத்தேனை மற்றும் நோட்டன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள காட்டாறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

அதிகளவான நீர்வரத்து காரணமாக மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களைத் தவிர்ந்த ஏனைய சில நீர்த்தேக்கங்களின் நீர் வான்கதவுகள் வழியாக வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மலைப்பகுதிகளில் அதிகளவில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும், வாகனங்களின் மின் விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறும் நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தை கட்டுப்படுத்தி அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அரச அதிபர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நுவரெலியா – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அவ்வாறான பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: https://samugammedia.com/heavy-rain-intensifies-in-the-central-hill-country-water-levels-rise-in-reservoirs-warning-for-drivers-1786260903

NO COMMENTS

Exit mobile version