மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சுக்கான்கேணி தாமரை குளத்தில் நேற்று மாலை மீனுக்கு வலை கட்டிவிட்டு, இன்று காலை மீனை எடுத்து கொண்டு வருவதற்காக தாமரை குளத்துக்குச் சென்றுள்ளார்.
மீன்பிடிக்கச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று மனைவி தேடிச் சென்ற போது அவர் சடலமாக இருப்பது தெரிய வந்தது.
அதனையடுத்து குடும்பத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/tragedy-family-man-who-went-fishing-recovered-dead-1783442101
