Home இலங்கை முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

0
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பாக தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ ரீ.பீ.சரத்  தலைமையில்  விசேட கலந்துரையாடல் நேற்றையதினம் (15) முல்லைத்தீவு  செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்  அ.உமாமகேஸ்வரன் ஒழுக்குபடுத்தலிலும் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வீட்டுத்திட்டம் இல்லாதோர் விபரங்கள், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளின் விபரங்கள், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தற்போதய நிலமைகள், எதிர்காலத்தில் தேவையான வீடுகள்  என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வீடுகள் வழங்கப்படும் எனவும், களுத்துறை மாவட்டத்திற்கு வழங்கவேண்டிய 100 வீடுகளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கியுள்ளதாகவும், வீட்டுத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு கிராம பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும் மேற்பார்வையுடனும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்   எனவும், எதுவித பக்கச்சார்புகளுமின்றி வீட்டுத்திட்டங்கள் வழங்கவேண்டும் எனவும்,  வீடுகள் அமைக்கும்போது அதனை பரிசீலனைசெய்து பலமான முறையில் அமைக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  செ.திலகநாதன், மாவட்டச் செயலக மேலதிக அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள்,  கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/special-discussion-regarding-the-housing-project-in-mullaitivu-1781592941

NO COMMENTS

Exit mobile version