Home இலங்கை மூடப்பட்டுள்ள ஒடியார் வீதி வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்க கோரிக்கை!

மூடப்பட்டுள்ள ஒடியார் வீதி வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்க கோரிக்கை!

0
image

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதி வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் அமைந்துள்ள ஒடியா வீதி (கிழக்கு பல்கலைக்கழக வீதி) தற்பொழுது கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. 

இந்த வீதியானது புறம்படி பகுதியிலிருந்து திருகோணமலை பிரதான வீதியை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாகும்.

சுமார் 65 வருடங்களுக்கும் மேலாகப் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த வீதிக்கு, கடந்த 1989-ஆம் ஆண்டில்தான் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. எனினும், அதற்கு முன்பிருந்தே மக்கள் இந்த வீதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் (சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு) பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் எனப் பல தரப்பினரும் அன்றாடம் பயன் பெற்று வந்தனர்.

வெறும் 150 மீட்டர் தூரத்தைக் கடந்து பிரதான வீதியை அடையக்கூடிய வசதி இருந்தும், தற்பொழுது இந்த வீதி மூடப்பட்டுள்ளதால், மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியானது வடகீழ் பருவக்காற்றுக் கால மழையினால் சுமார் 6 அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கக்கூடிய ஒரு பகுதியாகும். 

அவ்வாறான ஒரு மோசமான வெள்ளப் பெருக்கின் போது, விசேட தேவையுடைய பிள்ளை ஒன்றைக் காப்பாற்ற முயன்ற முதியவர்கள் இருவர் உயிரிழந்த துயரச் சம்பவமும் இங்கு நிகழ்ந்துள்ளது.

யுத்தக் காலத்தைக் காரணம்காட்டி மூடப்பட்ட இந்த வீதியை மீண்டும் திறக்குமாறு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் மற்றும் பிரதேச சபை ஆகியோருக்குப் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டும், இதுவரை எந்தவொரு முறையான பதிலும் வழங்கப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், எழுத்துப்பூர்வமான எந்தவொரு பதிலும் அளிக்காமல், சாக்குப்போக்குகளைக் கூறி இந்த விவகாரத்தைக் காலம்கடத்தி வருகின்றனர்.

கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் (புயணநவவந), இந்த வீதி பொதுமக்களுக்கானது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற பிற பல்கலைக்கழகங்கள், தனிநபர் ஒருவருக்காகக் கூடத் தங்கள் பாதைகளைத் திறந்துவிட்டுள்ள வரலாறுகள் உண்டு. யாழ்ப்பாணம், பேராதனை போன்ற எந்தவொரு பல்கலைக்கழகமும் பொதுமக்களின் வீதிகளை மூடிய சரித்திரம் இல்லை. 

ஆனால், கிழக்கு பல்கலைக்கழகம் மட்டுமே தங்களை ஏமாற்றி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், உரிமையையும் கருத்திற்கொண்டு, இந்த வீதியை உடனடியாகத் திறந்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடமும், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/request-to-open-the-closed-odiyar-road-for-public-use-1781606029

NO COMMENTS

Exit mobile version