ராகம – கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.
அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தொடர்புடைய ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
