Home இலங்கை வடக்கில் நிலை பேரான தன்மை வாய்ந்த சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை

வடக்கில் நிலை பேரான தன்மை வாய்ந்த சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை

0
image

வட மாகாணத்தில் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட கள ஆய்வுப் பயணத்திலும், உயர் மட்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க கலந்துகொண்டார்.

டச்சுக் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சின்னங்கள், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் காட்டு குதிரைகள் மற்றும் தனித்துவமான இயற்கை வளங்களைக் கொண்ட டெல்ஃப்ட் தீவை, நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுலா இலக்காக உருவாக்குவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தக் கள ஆய்வின்போது, தீவின் சுற்றுலா வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் அடையாளம் காணப்பட்டன. எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாகவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) நிதி ஒதுக்கீடுகளின் மூலமாகவும் தேவையான வளங்களைப் பெற்று, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், போக்குவரத்து மற்றும் படகுச் சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், உள்ளூர் மக்களின் சுற்றுலா விருந்தோம்பல் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தக் கள ஆய்வுப் பயணத்திலும் கலந்துரையாடலிலும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் கருணாநாதன், வைத்தியர் ஸ்ரீ பவனந்தராஜா சண்முகநாதன் மற்றும் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTPB) ஆகியவற்றின் அதிகாரிகள், டெல்ஃப்ட் பிரதேச செயலாளர், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

கள ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அடுத்தகட்ட செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

Source: https://samugammedia.com/steps-to-develop-the-north-as-a-major-tourist-center-1785839019

NO COMMENTS

Exit mobile version