Home இலங்கை வடமாகாண பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்

வடமாகாண பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்

0
image

வடமாகாண பட்டதாரிகளின் தரவுகள் சேகரிப்பு மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பட்டதாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம், அரசியல் ஆய்வாளர் செல்வின், தொழில்முனைவோர் மற்றும் வளவாளர்களான வை. ஷர்மிகன், கே. ருஷாங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் எவரும் கலந்துகொள்ளாதமை குறித்து பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தனது கவலையை வெளியிட்டார்.

ஏழு ஆண்டுகளாக தொடரும் வேலைவாய்ப்பு நெருக்கடி

வடமாகாணத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த பிரச்சினை வடமாகாணத்திற்கு மாத்திரமன்றி நாடு முழுவதும் காணப்படும் முக்கிய சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், தொழில்முனைவோர் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை கொள்கை மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பட்டதாரிகள் முன்வைத்த கேள்விகள்

கலந்துரையாடலில் பங்கேற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் உருவாகுவதற்கான காரணங்கள், வடமாகாணத்தின் பொருளாதார வளங்களை வேலைவாய்ப்புகளாக மாற்றும் வழிகள், அரசின் பட்டதாரிகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு கலந்துகொண்ட பிரமுகர்கள் தங்களது கருத்துக்களையும் விளக்கங்களையும் வழங்கினர்.

மேலும், பட்டதாரிகள் தொழில்முனைவோர் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.

பட்டதாரிகள் தொடர்பான சமூக பார்வை குறித்து கவலை

நிகழ்வில் உரையாற்றிய பட்டதாரி ஒருவர், சமூக ஊடகங்களில் பட்டதாரிகள் தொடர்பில் வெளியிடப்படும் சில அவமதிப்பான கருத்துக்கள் மனவேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

பட்டதாரிகள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் தவறான புரிதல்களை மாற்றுவதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“Northern Research Institute” அறிமுகம்

இதன்போது “Northern Research Institute” என்ற புதிய ஆய்வு முயற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழகங்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சமூகத்திற்கிடையில் இணைப்புப் பாலமாக செயற்பட்டு, ஆய்வுகளை நடைமுறைத் திட்டங்களாக மாற்றுவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

இதன் ஊடாக பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள், தொழில்முனைவு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளை உருவாக்குவதற்கான தளமாக இது அமையும் என குறிப்பிடப்பட்டது.

மேலும், இந்த முயற்சிக்கான இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பட்டதாரிகள் தங்களது ஆய்வுகளை சமர்ப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பட்டதாரிகளுக்கு விவசாய காணி வழங்க கோரிக்கை

பட்டதாரிகளுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் காணிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.

இதன் மூலம் பட்டதாரிகள் விவசாயத் துறையில் ஈடுபட்டு, ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுடன், நாட்டின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

Source: https://samugammedia.com/discussion-in-jaffna-about-the-employment-issues-of-vavuniya-district-graduates-1783935611

NO COMMENTS

Exit mobile version