Home இலங்கை வவுனியாவில் 4 புதிய வீடுகள் கையளிப்பு: இந்த ஆண்டுக்குள் 410 வீடுகளை அமைக்க இலக்கு!

வவுனியாவில் 4 புதிய வீடுகள் கையளிப்பு: இந்த ஆண்டுக்குள் 410 வீடுகளை அமைக்க இலக்கு!

0
image

அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “எனக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளிலான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 4 புதிய வீடுகள் இன்று  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்கவால் இவ்வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தின் அவுசதபிட்டி, கலுகுன்னம்மடுவ, புளியங்குளம், கிறிஸ்தவகுளம் கிராமங்களில், தலா 10 இலட்சம் ரூபாய் அரசாங்க செலவில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன

வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க, இத்திட்டத்தின் எதிர்கால இலக்குகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

“இவ்வாண்டுக்குள் வவுனியா மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற 410 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கத்தினால் 410 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 12,000 வீடுகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/4-new-houses-handed-over-in-vavuniya-target-to-build-410-houses-within-this-year-1784279699

NO COMMENTS

Exit mobile version