Home இலங்கை வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு: ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய பொலிசார்

வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு: ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய பொலிசார்

0
image

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 குற்றவியல் நடவடிக்கைகள் சட்டக்கோவையின் 106 (1) ஆம் பிரிவின் கீழ், வவுனியா நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், எதிர்வரும் 2026 செப்டெம்பர் 12ஆம் திகதி நைனாமடு காட்டு பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி வாய்ந்த எச்சங்கள் காணப்படும் பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த மத வழிபாடுகள் ஒரேநாளில், ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதுடன், இரு தரப்பினரினதும் சமய வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டு பிரதேசத்தின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறான இடப்பிரச்சினைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், வெடுக்குநாறிமலையை மையமாகக் கொண்டு நாட்டில் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று மாலை 3.00 மணிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Source: https://samugammedia.com/special-buddhist-worship-at-veddakunari-hill-police-approach-court-against-temple-administration-1789023430

NO COMMENTS

Exit mobile version